திசை தோறும் தமிழ் மணக்க - கன்னித் தமிழிலிருந்து கணினித்தமிழ்!

                  நாம் வாழும் பூமியில் ஒருவரோடு ஒருவர் கருத்தாடல் செய்ய அனைவருக்கும் ஒரு மொழி உண்டு. அவ்வாறே இந்த இணைய உலகில் நாம் உறவாட மொழி தேவை. இதில் முதன்மை நோக்கு யாதெனில் யார் யாரெல்லாம் நுட்பக் குழந்தைகளான கணினிக்கும் திறன்பேசிக்கும் அவரவர் தாய்மொழியைப் புரிய வைத்து பேச, உரையாடச் செய்கிறார்களோ அவர்களின் மொழி இணைய உலகில் கோலோச்சும்.

              ஆகவே, சில நூற்றாண்டுகளே வரலாறு கொண்ட ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியன், சீனம், உருது, சப்பானியம் ஆகிய மொழிக்காரர்கள் தங்கள் தாய்மொழியை இந்த நுட்பக் குழந்தைகளுக்கு  அவைகளின் மொழியில்(low level language)  கற்பிப்பதற்கான மொழியை(High level Language) உருவாக்கிப் புரியவும் பேசவும் வைத்துவிட்டார்கள்.  கணினியில் திறம்பட வேலை செய்பவர்கள் எனப் பெயர்பெற்ற தமிழர்கள் பலர் ஆங்கில மொழிக்குச் சேவகம் செய்தே காலம் கழித்துவிட்டபடியால், சிலரின் முயற்சியால் சில முன்னேற்றமே இந்த இணைய உலகில் நம்மால் செய்ய முடிந்துள்ளது.   இது கணினி வரலாறு சொல்லும் உண்மை.

                  இதைத் தாண்டி மொழி வளமையை இணைய உலகில் கட்டிக்காக்கப் பரவலான விழிப்புணர்சியை தமிழத்தில் படித்தவர் படிக்காதவர் ஆகிய அனைவர் மத்தியிலும் ஏற்படுத்த வேண்டி இருந்தது. இதனை உத்தமம் கணினித்தமிழ்ச் சங்கம் ஆகிய இருபெரும் அமைப்புகள் முடிந்த அளவில் செய்துவந்தன. மேலும் கணினித்தமிழ் விழிப்புணர்ச்சி மாநாடுகளை  திரு தெய்வசுந்தரம் திரு இராமகி ஐயா ஆகியோர் கொண்ட குழுவினர் நடத்தினர். மேலும், தனிநபர்களாகச் சிலர் கருத்தரங்கங்கள் வழியாக முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் ஒரு போதாமை இருந்த வண்ணம் காணப்பட்டது.

                       தற்சமயம் அரசுத் துறைசார்ந்து இணையக்கல்விக் கழகத்தில் இயக்குநர் அவர்களின் திட்டத்தினாலும் அவர்கள் குழுவினரின் முயற்சியினாலும் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும்  கணினித்தமிழ் குறித்து பேசவும் அதன்பால் கவனத்தை செலுத்தவும் செய்யும் விதமாக மதுரையில் கணித் தமிழ் பேரவை அமைப்பதற்கான தொடக்கவிழா நிகழ்த்தப்பட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. வரவேற்கத்தக்கது.

                 அரசு நிறுவனமே இணைய உலகில் தமிழின் மேலாண்மை சிறக்க மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கியதாகப் பலர் உணரும் இத்தருணத்தில் மிக நல்ல முன்னேற்றத்தை வெகுவிரைவில் நாம் காணலாம் என நம்புவோம்.

Comments

  1. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இரத்தினவேல் ஐயா!

      Delete
  2. பிரபாகர்September 9, 2015 at 8:30 PM

    திசை தோறும் கணினித்தமிழ் மணக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!

திருக்குறளும் அரிய தகவல்களும்